காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானத்தில், ஆப்கானை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தைப் பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து தலிபான் படைகள் அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளன. இதையடுத்து ஆப்கானிஸ் தானியர்கள், எப்படியாவது வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் நோக்கத்தில் காபூல் விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்குள்ள வெளிநாட்டினரும் தங்கள் தாய் நாட்டுக்கு செல்லத் துடித்தபடி உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் ஆப்கானை சேர்ந்தவர்களை மீட்பதற்கான அமெரிக்க விமானப்படை விமானம் நேற்று (ஆகஸ்டு 21) அங்கிருந்து புறப்பட்டது. நடுவானில் 28 ஆயிரம் அடிக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
அதோடு விமானத்திற்குள் காற்றழுத்தம் குறைவாக இருந்ததால், அந்தப் பெண்ணுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், காற்றழுத்தத்தை சீராக்க, விமானி விமானம் பறக்கும் உயரத்தைக் குறைத்துள்ளார். இது அந்தப் பெண்ணின் உயிரைக் காக்க உதவியிருக்கிறது.
ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டைன் விமானப்படை தளத்துக்கு விமானம் சென்றடைந்த போது, பெண் குழந்தையை அவர் பெற்றார் என அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது. விமானம் தரை இறங்கிய பின்பு உள்ளே சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
பின்னர் விமானத் தளத்தின் அருகே இருக்கும் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.