ஆப்கானில் கடந்த சில வருடங்களாகவே வறட்சி, பட்டினி, போன்ற மோசமான சூழல் தலைவிரித்தாடுகின்றன. குழந்தைகளுக்கு உணவு கொடுத்து வளர்க்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக ஐநாவின் உலக உணவுத் திட்டத் தலைவர் டேவிட் பீஸ்லி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைத் தொடங்கி 6 மாதங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தாலிபான்கள் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் முதல் ஆட்சி நடத்தி வரும் சூழலில், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மோசமாக உள்ளது. தாலிபான்கள் ஆட்சியமைத்த பின் ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்வதில் உலக நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. பல நாடுகள் தங்களின் நிதியுதவிகளை நிறுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில்தான் ஆப்கானிஸ்தானிற்குச் சென்று வந்த ஐநாவின் உணவுத் திட்டத் தலைவர் வெளியிட்ட செய்தி அதிர்ச்சி தருவதாகவுள்ளது. ‘‘ஆப்கானில் தற்போது சுமார் 4 கோடி மக்களில் 2.3 கோடி பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். வேறு வழி இல்லாத மக்கள் பலரும் சிறுநீரகங்களையும், பெற்ற குழந்தைகளையும் விற்றுள்ளார்கள். இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் 97 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் செல்லக் கூடிய அபாய நிலை உள்ளது’’ என்று உணவுத் திட்டத் தலைவர் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இப்படியான சூழலில் வறுமையிலும் பொருளாதார சிக்கலிலும் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்டெடுக்க உலக நாடுகள் கைகொடுக்க வேண்டும் என்று ஐநா அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கானின் மோசமான சூழலை அறிந்த இந்தியா, ஆப்கானிற்கு உதவ முன்வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. 50,000 டன் கோதுமை மற்றும் , 3.6 டன் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாகவும், வரும் பிப்ரவரி மாதம் இதற்கான பணி தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் பொருட்கள் பாகிஸ்தான் சாலை வழியாக ஆப்கானிஸ்தான் சென்றடையும் என்றும் சொல்லப்படுகிறது.