கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது முன்னாள் முதலமைச்சர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிற்கிடையே இடையே இன்றும் வாதம் அனல் பறந்ததது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அந்த பொதுக்குழுவுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மன் வைரமுத்து ஆகியோர் தரப்பில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்,
பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11ல் பொதுக்குழு
கூட்டப்படும் என ஜூன் 23 பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டதாகவும், அந்த
அறிவிப்பு அப்போதே நேரலையாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் வந்தாகவும், செய்தியாக மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானதாகவும் கூறினார். எனவே அதை நோட்டீசாக கருத வேண்டும் என்றும் விஜய் நாராயணன் விளக்கம் அளித்தார்.

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ல்
தயாரிக்கப்பட்டது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்
காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பபட்டது, ஜூலை 1ல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என குறிப்பிட்ட விஜய் நாராயண், ஜூலை 11ந்தேதி பொதுக்குழு கட்சி விதிப்படிதான் நடத்தப்பட்டதாக விளக்கம் அளித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்
பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒரு ஆண்டுக்கும் முன்னரே எப்படி
பதவிகள் காலாவதி ஆனது என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், 2021 டிசம்பர் 1
செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழுவில்
ஒப்புதல் பெறவில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்
பதவிகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதே முடிவாகும் என்று விளக்கம் அளித்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்பான கட்சி விதிகள் மட்டுமே திருத்தப்பட்டதாகவும், பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இபிஎஸ் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால்
கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் வழக்கமான
பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் முன்னறிவிப்பு வழங்க வேண்டும்
எனவும், ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளும்
பட்சத்தில் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு 15 நாட்களுக்கு முன் முன்னறிவிப்பு கொடுக்க
அவசியமில்லை என்றும் தெரிவித்தார். கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், பெரும்பான்மையான உறுப்பினர்களின் முடிவுக்கு எதிரானதாகி விடும் என்றும் எஸ்.ஆர்.ராஜகோபால் வாதிட்டார்.
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத்
ஆஜராகி, உள்கட்சி விவகாரங்களை பொருத்தவரை பெரும்பான்மையையே பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஓபிஎஸ் தரப்பு வாதம்
எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதங்களுக்கு பதிலளித்த பன்னீர்செல்வம் தரப்பு
மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார், ஜூன் 23 பொதுக்குழுவில் எந்த
தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை என்றால், இரு பதவிகளுக்கான தேர்தலுக்கு
ஒப்புதல் அளிக்கும் கேள்விக்கே இடமில்லை என்றார். பொதுக்குழு ஒப்புதல்
அளிக்காவிட்டால் இரு பதவிகளும் காலாவதியாகி விடும் என ஜூன் 23 பொதுக்குழு
தீர்மானத்தில் எங்குமே குறிப்பிடவில்லை என்றும் அவர் தனது வாதத்தை முன்வைத்தார்.

எந்தவிதமான காலியிடமும் ஏற்படாத நிலையில், காலியிடம் ஏற்பட்டது போன்ற
தோற்றத்தை ஏற்படுத்த ,இபிஎஸ் தரப்பில் முயற்சிக்கின்றனர் என்று கூறிய வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார், பொதுக்குழு குறித்து தொலைகாட்சி மற்றும் பத்திரிகை மூலமாக தெரிந்து கொள்வது ஏற்று கொள்ள முடியாது என்றார். முறையாக நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றும், அந்த நோட்டீசைதான் பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.
அப்போது நீதிபதி, பெரும்பான்மையான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளார்களா என கேள்வி எழுப்பியபோது, 2665
பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை, ஒட்டுமொத்த ஒன்றரை கோடி தொண்டர்களின்
விருப்பமாக கருத முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிரந்தர அவைத்தலைவர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர் அல்ல என வாதிட்டார். இரு பதவிகளும் காலியாகிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் அவைத் தலைவரை நிரந்தரமாக நியமிப்பதற்கு முன்மொழிந்தபோது இணை ஒருங்கிணைப்பாளர்
என்றே எடப்பாடி பழனிசாமியை அழைத்ததற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன என்றும்
அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார்.
அம்மன் வைரமுத்து தரப்பு வாதம்
அம்மன் வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, நீதிமன்றம்
பிறப்பிக்கும் உத்தரவை ஊடகங்கள் பிளாஷ் செய்வதை நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ
அறிவிப்பாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அப்படிதான் ஜூன் 23 அதிமுக பொதுக்குழுவில் நேரலை செய்ததை ஜூலை 11 ந்தேதி பொதுக்குழுவிற்கான நோட்டீசாக கருத முடியாது என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அம்மன் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.








