கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளித் தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர்
ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை
ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரிடம் விழுப்புரம் நீதிமன்ற
நீதிபதி புஷ்பராணி உத்தரவின்பேரில் ஒரு நாள் சி பி சி ஐ டி போலீசார் விசாரணை
செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 5 பேரையும்
ஜாமினில் விடுவிக்கக் கோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம்
சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவின் மீதான விசாரனை இன்று நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விசாரணையின்போது, சின்னசேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். நகலை கொண்டு ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த மனுவை ஏற்க முடியாது எனவும், வழக்கு சிபிசிஐடி வசம் சென்றுவிட்டதால் சிபிசிஐடி பதிவு செய்யும் எப்.ஐ.ஆரை கொண்டு ஜாமின் மனு தாக்கல் செய்யுமாறும் பள்ளி தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி சாந்தி அறிவுறுத்தினார். மேலும், வருகின்ற 1ம் தேதி ஜாமின் மனு மீதான விசாரனை எடுத்துக் கொள்ளப்படும் எனவும், ஜாமின் மனு தொடர்பாக சிபிசிஐடி விளக்கம் அளிக்கவும் விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி
உத்தரவிட்டார்.
பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 4 பேருக்கு ராமச்சந்திரன் என்ற வழக்கறிஞர் ஜாமின் மனுவையும், பள்ளி முதல்வர் சிவசங்கரனுக்கு மட்டும் சீனிவாசன் என்ற வழக்கறிஞரும் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.
-ம.பவித்ரா