தமிழகத்திற்கு கூடுதலாக 7 லட்சத்து 55 ஆயிரத்து 530 தடுப்பூசிகள் மும்பை, ஹைதராபாத்திலிருந்து விமானங்கள் மூலம் சென்னை வந்தன.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் பிரதமா் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்று மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசி மருந்துகளை இன்று மும்பை, ஹைதராபாத்திலிருந்து 2 விமானங்கள் மூலம் சென்னைக்கு அனுப்பிவைத்துள்ளது.
அதன்படி மும்பையிலிருந்து இன்று மாலை சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 5 லட்சத்து 89 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் 50 பார்சல்களில் வந்தன. அதேபோல ஹைதராபாத்திலிருந்து இன்று மாலை சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 530 டோஸ் கோவாக்சீன் தடுப்பூசி மருந்துகள் 37 பார்சல்களில் வந்தன.
இன்று ஒரே நாளில் மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 530 டோஸ் தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பிவைத்துள்ளது. தமிழக சுகாதாரத்துறையினா் சென்னை விமானநிலையத்தில் இந்த தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொண்டு,குளிர்சாதன வாகனங்கள் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள மருத்துவ கிடங்கிற்கு எடுத்து சென்றனா்.







