கடன் பெற்ற விவகாரத்தில் ஒப்பந்தத்தை மீறியதாக நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையை செப்.29-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாாங்கிய கடனை லைகா நிறுவனம் திருப்பிச் செலுத்தியது. இந்த தொகையை திருப்பித் தரும் வரை, விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரித்த ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் வேறு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, விஷால் சொத்துக்கணக்கு மற்றும் வங்கிக் கணக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை இருநீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை வெளியிட இடைக்கால தடையும் விதித்தது.
பின்னர் லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்த போது, விஷால் நேரில் ஆஜரானார். அப்போது, அவரது சொத்துக் கணக்கு, வங்கி கணக்கு விவரங்களை செப்.19-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், 19-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. அவர் தரப்பில் வக்கீல்களும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, விஷாலை நேரில் ஆஜராக மீண்டும் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி கடந்த 22-ம் தேதி நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விஷால் ஆஜரானார். அப்போது சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் விஷால் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி, எச்சரித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : மாநிலம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் – பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு
இந்நிலையில், இன்று நடிகர் விஷால் தனது சொத்து விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஐ.டி.பி.ஐ, ஆக்சிஸ், ஹெச்.டி.எப்.சி, பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு ஆகிய வங்கிகளின் கணக்குகள், அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்தார். முழுமையான தகவல்களை விஷால் தாக்கல் செய்யவில்லை என்று லைகா தரப்பு வாதிட்ட நிலையில், வழக்கு விசாரணையை செப்.29-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார்.