நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயமாக இருக்கும் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 15 ஆம் தேதி “ஹை ஆன் யுவன்” என்ற (HIGH ON U1) பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் சென்னை திரும்பிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசை நிகழ்ச்சிக்கு மலேசியாவில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு வரவேற்பு கிடைத்ததாகவும், மக்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் புதிய முயற்சி எடுத்து இசை நிகழ்ச்சி நடத்தியதாகவும் கூறினார். இந்த இசை நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் கலந்துகொண்டு பாடல்களை பாடியும், நடனமாடியும் இசை நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்ததாகவும் குறிப்பிட்டார்.
பின்னர் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய் அரசியலுக்கு வரவிருப்பது நல்ல விஷயமாக இருக்கும் என்று கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா







