பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் கணக்கின் முகப்பு பக்கத்தில் தேசியக்கொடி புகைப்படத்தை மாற்றியுள்ளார்.
இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுதல், புராதன சின்னங்களில் தேசிய கொடி ஒளிரவிடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், நாடு முழுவதும் அனைவரது வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரையில் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதற்காக தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, சுதந்திர தினத்தையொட்டி சமூக ஊடகங்களில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைவரும் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்ததோடு, டிவிட்டரில் தனது முகப்புப் பக்கத்தை அவர் மாற்றினார். அந்த வரிசையில் தற்போது, நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் கணக்கில் உள்ள தனது முகப்பு பக்கத்தில் தேசியக்கொடி புகைப்படத்தை வைத்துள்ளார்.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் கணக்கில் தனது புகைப்படத்தை நீக்கிவிட்டு தேசியக்கொடியை வைத்துள்ளது, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
– இரா.நம்பிராஜன்








