ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா குறித்து, துறை சார்ந்தவர்களின் கவலையை கேட்டறிந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்கான முன்னெடுப்பையும் எடுத்திருப்பதற்கு நடிகரும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நாசர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமுதாய முன்னேற்றத்திற்கு திரைப்படங்கள் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது, இருக்கிறது என்பதை வரலாற்று ஏடுகள் நம்மை ஞாபகப்படுத்துகின்றன. இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டத்தின்போது அக்கால திரைப்படங்கள் அவ்வுணர்வை மக்களிடையே பரவ செய்ததற்கான சாட்சிகள் கருப்பு, வெள்ளை படங்களாக இன்றும் காண கிடைக்கின்றன.
குறிப்பாக, தமிழகத்தில் சமுதாய சீர்வை கொண்டு வந்ததில் திரைப்படங்கள் பெரும் பங்கு ஆற்றியிருக்கின்றன. இன்றைய சூழலில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி இருக்கிறது.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தணிக்கை முறையே போதுமானதாக இருந்தும், இப்புதிய சட்டம் படைப்பாளிகளின் கருத்துக்களை முடக்கும் வண்ணமாக இருக்கிறது. அரசுகள் மக்களின் பிரதிநிதி, மக்கள் உணர்வுகளுக்கு அவர்கள் செவி சாய்க்க வேண்டும், கருத்தில் கொள்ள வேண்டும். தமிழக மக்களின் பிரதிநிதியாக இருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்விஷயம் குறித்து, துறை சார்ந்தவர்களின் கவலையை ஆழமாகக் கேட்டறிந்து அதற்கான முன்னெடுப்பையும் எடுத்திருக்கிறார் என்பது எங்களை நிம்மதி அடைய செய்வதாக இருக்கிறது. அவருக்கு நடிகர் சமூகத்தின் சார்பாக நன்றி சொல்வது, நம் கடமை. இவ்வாறு நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.







