நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். விவேக் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் விசாரிக்க வந்த நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி காரணமாகவே விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது சென்னை மாநகராட்சி புகார் அளித்தது. இதன் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இதனால் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் முழுமையாக இல்லை என்பதால், புதிய மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் வடபழனி காவல் நிலையத்தில் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, நான் அளித்த பேட்டியை மாநகராட்சி நிர்வாகத்தினர் தவறாக புரிந்து கொண்டு அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.







