காய்ச்சல் காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் வீடு திரும்பியுள்ளார்.
ஹைதராபாத் சென்றுவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 23ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் இருந்ததால் மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கமல்ஹாசனுக்கு சாதாரண காய்ச்சலா அல்லது வேறு ஏதேனும் வைரஸ் காய்ச்சலா என்ற அடிப்படையில் சோதனை மேற்கோள்ளப்பட்டதாகவும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று மருத்துவமனை நிர்வாகம்வெளியிட்ட செய்திக்குறிப்பில், “லேசான காய்ச்சல், இருமல், சளித் தொந்தரவு காரணமாக கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். இன்று அல்லது ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காய்ச்சலில் இருந்து குணமடைந்த கமல்ஹாசன், இன்று காலை வீடு திரும்பியுள்ளார். மேலும் வீட்டிலேயே அவர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.








