பயங்கரவாத செயலில் ஈடுபடுவர்களை விட்டுவிடக்கூடாது- வானதி சீனிவாசன்

பயங்காரவாத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் பாஜக அலுவலகம் உள்பட 7 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இந்த நிலையில்…

பயங்காரவாத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜக அலுவலகம் உள்பட 7 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இந்த நிலையில் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாநகர பகுதிகளில் 6 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது. பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் வீடு, கடைகள் ‌மீது தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோவையில் இதுவரை 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்திருப்பதால் 4 எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் நேரில் பார்வையிட்டு கட்சி தலைமைக்கு அறிக்கை கொடுக்க உள்ளோம்.

கோவை மாவட்டம் பல்வேறு காலகட்டங்களில் பயங்காரவாத தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அமைதியை குலைத்து விட்டு வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது.

கோவை நகரம் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு சட்டம் ஒழுங்கு கெடுவதை முதலமைச்சர் அனுமதிக்க கூடாது. நாட்டின் ஒற்றுமை, முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமாதிரி பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களை விட்டுவிடக்கூடாது.

பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை ஆதாரம் இருந்தும் கைது செய்ய தாமதப்படுத்துவது ஏன்? உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்க இதற்கு வேறு அரசியல் அழுத்தம் இருக்கிறதா? என்று அவர் கேள்வியெழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.