யானைகள் வழித்தடமான கோவை தடாகம் பகுதியில் உரிமம் இல்லாமல் செயல்படும் செங்கல் சூளைகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை தடாகம் பகுதியில் யானைகள் வழித்தடங்களில் அமைந்துள்ள செங்கல் சூளைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுபடி ஆய்வு செய்த தாசில்தார், செங்கல் சூளைகளை மூடும்படி உத்தரவிட்டார். இதை எதிர்த்து அதன் உரிமையாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். விசாரணையின் போது, தமிழ்நாடு கனிம வள முறைப்படுத்தல் சட்டப்படி, செங்கல் சூளைகளை மூடும்படி உத்தரவிட, மாவட்ட ஆட்சியருக்கு தான் அதிகாரம் உள்ளதாகவும், தாசில்தாருக்கு அதிகாரமில்லை எனவும் வாதிடப்பட்டது.
உரிமங்களை புதுப்பிக்க, உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்த போதும், அவற்றைக் கிடப்பில் போட்டுவிட்டு, சூளைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
அதே நேரம், தமிழக அரசுத் தரப்பில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலில்தான் தாசில்தார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், இதில் எந்த விதிமீறலும் இல்லை எனவும் வாதிடப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, செங்கல் சூளைகளை மூடிம்படி உத்தரவிட மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி, தாசில்தார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே நேரம், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பளித்து 4 வாரங்களில் தகுந்த உத்தரவை, மாவட்ட ஆட்சியர் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, உரிமம் இல்லாத செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
…..







