தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடக் கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் திடீரென கர்நாடக அரசு தண்ணீர் வழங்குவதை நிறுத்தியது.
இந்த நிலையில் 2 ஆவது கட்டமாக 15 நாள்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது.
இதற்கு கர்நாடகத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தங்களிடம் போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்தது. கர்நாடக பாஜக , மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவதை கடுமையாக எதிர்த்தனர்.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்கினர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது குறித்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு வருகிற செப். 21 ஆம் தேதி சாரணைக்கு வருகிறது.







