மேல்மருவத்தூருக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் சென்ற போது இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது ஆற்காடு அருகே சென்று கொண்டிருந்த போது டீ கடையில் நிறுத்தியுள்ளனர். அப்போது சாலையோரம் சென்ற உயரழுத்த மின்சாரக்கம்பி பேருந்தின் மேல் தலத்தில் உராசியுள்ளது. இதன் காரணமாக பேருந்து முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதை அறியாமல் டீ அருந்துவதற்காக பேருந்தில் இருந்து கீழே இறங்கிய அகல்யா(20) என்ற பெண் பேருந்து கம்பியை பிடித்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு நகர காவல் துறையினர் அகல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







