சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு பகுதியில் சுவர் இடிந்து விழுந்தத்தில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு பெண் உயிரிழந்தார்.
சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை ஜேசிபி இயந்திரம் கொண்டு அண்ணாசாலையில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த பழைய கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்று வந்து போது, திடீரென ஒரு பகுதி கட்டிட சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்ததுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அந்த இடிந்த கட்டிட சுவர், சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது விழுந்துள்ளது. இதில் இவர்கள் இருவருமே இடிப்பாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர் . இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதி காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கிய இளம்பெண்ணை மீட்கும் பணியில் இறங்கினர். இடிபாடுகளில் சிக்கிய இளம்பெண்களை சுமார் 20 நிமிடமாக போராடி படுகாயங்களுடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இன்னொருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த அந்த இளம்பெண் பிரியா என்பதும், அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் என்பதும், சென்னை பம்மலில் தனது சித்தி வீட்டில் தங்கியிருந்து அண்ணா சாலையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில்தான் பிரியா இன்று காலை அலுவலகத்திற்கு அண்ணா சாலை வழியாக நடைபாதையில் நடந்து செல்லும் போது கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் பிரியா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா உயிரிழந்தது குறித்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்களும் மகளின் உடலை பார்க்க சென்னைக்கு விரைந்த வந்து உள்ளனர்.தற்போது பிரியாவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பழைய கட்டிடத்தை இடிக்கும் போது மாநகராட்சி அனுமதி பெற்ற பின் தான் இடிக்க வேண்டும். அதேநேரம் பழைய கட்டிடத்தை இடிக்கும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.ஆனால் இதில் எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் கட்டிடத்தை இடித்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து அனுமதியின்றி கட்டிடத்தை இடித்தவர்கள் மீது ஆயிரம்விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் கிரேன் ஆப்ரேட்டர் ஆகிய இருவரும் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர். தப்பியோடிய இவர்களை தற்போது ஆயிரம் விளக்கு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இச்சம்பவத்தால் சென்னையின் முக்கிய சாலையான அண்ணலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா