பவானி அருகே காதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து வெங்கடேஷை கண்டித்துள்ளனர்.
மேலும், கடந்த 8ஆம் தேதி இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் மாணவியின் தந்தை மற்றும் அவரது அத்தை தாக்கியதில் வெங்டேசின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து வெங்கடேஷ் அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதன் பின்னர் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, இளைஞரை தாக்கிய மாணவியின் தந்தை சரவணன், அவரது அத்தை சித்ராவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








