தவெக நிர்வாகி செங்கோட்டையன் இன்று பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டுள்ளார். தமிழகத்தை ஆளப்போகும் தலைவராக அவர் உருவெடுத்துள்ளார். அவருடைய தொலைநோக்குச் சிந்தனையை மக்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழகத்தை முன்னிறுத்தி அவர் முன்னெடுக்கும் இந்த அரசியல் பயணம் உலகளவில் கவனிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், “தமிழகம் ஏற்கனவே பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சிகளைக் கண்டுள்ளது. தற்போது நான்காவதாகத் மே 4 – ஆம் தேதி தவெக தலைவர் தளபதியின் ‘விசில் புரட்சி’ நடைபெறப் போகிறது. வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அரியணையில் அமரும்” என்று கூறினார்.
தவெக வாக்குகளை பிரித்தாலும், ஆட்சி அமைக்க முடியாது என்ற எதிர்கட்சிகள் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “யார் எத்தகைய கருத்துக்களைக் கூறினாலும் தவெக-வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது; அது வெறும் ‘அல்வா’ பேச்சுகளாகவே முடியும்” என்றார்.







