10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் நடத்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சதவிகிதம் மிகவும் குறைவாக உள்ளதாகவும், சராசரியாக 50% முதல் 60% மதிப்பெண்கள் பெறும் வகையில்
மாணவர்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய செயலாளர் காகர்லா உஷா, பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அடிப்படை வாசிப்பு திறன், எழுதும் திறன் இல்லாமல் இருப்பதாகவும், ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகிறதா, இல்லையா என்பதை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொதுத் தேர்வில் பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களே பெறும் நிலையில், மாணவர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கி குறைந்த பட்சம் 50% முதல் 60% வரை சராசரி மதிப்பெண்கள் பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், வகுப்பறையில் நடத்தும் பாடங்கள் தவிர்த்து மற்றவற்றை வீட்டுப் பாடங்களாக தர வேண்டும் என்றும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை அல்லது மாலையில் கூடுதல் நேரம் ஒதுக்கி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும், திண்டுக்கல், வேலூர், கரூர், புதுக்கோட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு படித்த மாணவர்கள் இந்த ஆண்டு மீண்டும் பள்ளிக்கு வராதது ஏன்? அந்த மாணவர்களின் நிலை என்ன? என்பதையும் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து சேர்க்கை மற்றும் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவுறுத்தல் வழங்கினார்.