கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் உலா வரும் ஒற்றை யானையால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள், அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேத்துப்பாறை, அஞ்சுவீடு போன்ற பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் யானை, காட்டெருமை, சிறுத்தை போன்ற விலங்குகள் நடமாடுவது வழக்கமாக இருந்து வந்தது. தற்பொழுது பேத்துப்பாறை கிராமத்தில் பகலிலேயே ஒற்றை யானையின் நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சத்தில் உள்ளனர்.
இதனால் கூலி வேலை, தோட்ட வேலைக்கு செல்பவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்தில் உள்ளனர். பேத்துப்பாறை கிராம இளைஞர்கள் அவ்வப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிராம மக்கள் யானையை கும்கி யானை வைத்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.





