களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை பனை மரங்களைச் சாய்த்து அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது இக்காப்பகம் யானைகள் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுவது வழக்கம். இந்நிலையில், வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஒற்றை காட்டு யானை களக்காடு அருகே
சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் தஞ்சமடைந்துள்ளது.
இந்த யானை இரவு நேரங்களில் உணவுக்காக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று இரவில் சத்திரங்காட்டில் நுழைந்த காட்டு யானை விவசாயி சந்திரசேகருக்குச் சொந்தமான விளைநிலத்தில் 3க்கும் மேற்பட்ட பனைமரங்களைச் சாய்த்து அட்டகாசம் செய்துள்ளது. இதனால், விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். மேலும், யானை நடமாட்டத்தால் விளைநிலங்களுக்குச் செல்ல அச்சமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அண்மைச் செய்தி: ‘‘பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும்’ – பள்ளிக் கல்வித் துறை’
பொதுவாக களக்காடு மலையடிவாரத்தில் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை யானைகள் நடமாட்டம் காணப்படும். தற்போது செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் யானைகள் அட்டகாசமும் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். விளைநிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்டவும், யானைகள் நாசம் செய்த பனை மரங்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








