உசிலம்பட்டி அருகே கோயில் உண்டியலை திருடிச் செல்லும் போது கோயில் சுற்றுச் சுவரில் மாட்டிக் கொண்ட கொள்ளையன் அங்கேயே உண்டியலை விட்டு விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கும், நகைச்சுவை நடிகர் ரமேஷ்கண்ணாவும் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடிப்பார்கள். இதன்பின்னர் கோயிலில் உள்ள விநாயகர் சிலையை கடத்திச்செல்ல முயற்சிக்கும்போது சிலையின் மீது கோயில் மணிக்கயிறு சிக்கிக்கொண்டதால் மணிச்சத்தம் ஒலிக்கும். இந்த சத்தத்தைக்கேட்டு பொதுமக்கள் வந்துவிடவே விநாயகர் சிலையுடன் தப்பி ஓட முயற்சிப்பார்கள். இதைப்போல கோயிலில் உண்டியலை தூக்கிக்கொண்டு செல்லும்போது தூக்க முடியாததால் கோயில் சுவற்றில் அப்படியே விட்டுச்சென்ற சம்பவம் உசிலம்பட்டி அருகே நடந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் அமைந்துள்ளது பெத்தனசாமி திருக்கோயில். இந்த கோயிலின் கதவு திறந்து கிடப்பதை பார்த்த கோயில் பூசாரி அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தார். கோயிலின் கதவை திறந்து கோயிலுக்குள் வைத்திருந்த சூலாயுதம், அம்மன் சிலையில் வைக்கப்பட்டிருந்த கண்மலர் மற்றும் ஆபரணங்கள் திருட்டு போயிருந்தது. கோயில் வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது சம்பவத்தன்று இரவு புகுந்த மர்மநபர் கோவில் வளாகத்தில் சாதாரணமாக உலா வருகிறார்.
சாமியின் கண்மலர், அம்மனின் சூலாயுதம் மற்றும் ஆபரணங்களை எடுத்துக்கொண்ட மர்மநபர் அவற்றை ஒரு துணியில் சுற்றியெடுத்துக் கொண்டுள்ளார். பின்னர் தனது முகம் தெரியாமல் இருக்க கோயிலில் இருந்த கட்டை பையை தன் தலையில் மூடிக்கொண்டு செல்லும் காட்சிகளும் அந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
இறுதியாக கோயில் உண்டியலை உடைக்க முடியாததால் அதை பெயர்த்து எடுத்து தன் தோளில் வைத்து தூக்கிச் செல்லும் போது சுற்றுச்சுவரில் மாட்டிக் கொள்ளவே அங்கேயே உண்டியலை விட்டு விட்டு தப்பி சென்றுள்ளார். இதனால் உண்டியலில் இருந்த பணம் தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகி ராஜசேகர் அளித்த புகாரின் அடிப்படையில் சேடபட்டி காவல் நிலைய போலீசார் கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையடித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.