5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்து பேச திமுக எம்பி ஆ.ராசா தகுதி இல்லை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்து திமுக எம்பி ஆ.ராசாவின், குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம். கடந்த எட்டு வருட காலங்களில் எவ்வித ஊழல் குற்றச்சாட்டிற்கும் பாஜக இதுவரை ஆளாகவில்லை. தமிழக திமுகவை சேர்ந்த தமிழக அமைச்சர்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
அதிமுகவில் நடக்கும் அதிகார சண்டை குறித்த கேள்விக்கு அது அவர்களின் உட்கட்சி பிரச்சனை. அதில் எப்போதும் பாஜக தலையிட போவதில்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பாரதிய ஜனதாவை முன்னிலைப்படுத்தி கூட்டம் நடைபெற்றது என்ற கேள்விக்கு நானும் சட்டமன்ற கட்சி குழு தலைவரும் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்மூவுக்கு ஆதரவு கேட்டு அக்கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் இதைத் தாண்டி அதில் வேறு ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன் உள்ள பெரியார் சிலையை எடுக்க வேண்டும் என்று கனல் கண்ணன் கூறிய கருத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்த நிலையில் உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு, அதை தற்போது தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடவுள் நிந்தனை செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக தங்கள் நிலைப்பாடு இருக்கும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி தற்போதைய விட அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், தமிழகத்தில் கூட்டணி தொடர்பாக என்ற கேள்விக்கு கூட்டணி கொடுத்த விஷயங்களை தேசிய குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அமலாக்க துறையை பாரதிய ஜனதா கட்சி தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறது என காங்கிரசின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கையில் காங்கிரஸ் கட்சி தான் அனைத்து குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஆகையால் அவர்கள் சொல்ல அருகதை இல்லை என்றும் தெரிவித்தார்.








