கன்னியாகுமரியில் சினிமா பட பாணியில் பால் வண்டியில் மறைத்து கொண்டு வரப்பட்ட 680 கிலோ குட்கா போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு
எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் கடுமையான தொடர்
நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை முப்பந்தல் அருகே பால் வண்டியில் குட்கா கடத்தி வருவதாக தனிப்படை உதவி ஆய்வாளர் மகேஷ்வரராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சோதனையின் போது அவ்வழியாக வந்த பால் வண்டியை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பால் வண்டியில் குட்கா இருந்தது தெரியவந்தது. உடனே வண்டியில் இருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்த நபர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த செந்தமிழ் செல்வன்
என்பது தெரியவந்தது. பின்பு அவரை பிடித்து தீவிர விசாரணை செய்தனர்.
மேலும் அந்த வாகனத்தை சோதனை செய்த போது குட்கா பதுக்கி வைத்து குமரி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அதன்பின் அவரிடமிருந்து 680 கிலோ குட்காவை தனிப்படை காவலர்கள் பறிமுதல் செய்து கைது செய்த நபரை ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.







