அரசியல் கட்சி பிரமுகர்களிடம் 5 லட்சம் ரூபாய் வரை ஆன்லைனில் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான விஜயகுமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி திமுக இளைஞரணி துணை செயலாளர் ஜோயலை ஏமாற்றி 15 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலம் சிவக்குமார் என்பவர் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட சிவக்குமாரின் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கை ஆய்வு செய்தனர். பின்னர் புதுச்சேரியில் பதுங்கியிருந்த சிவகுமாரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, சிவக்குமார் முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் பணிபுரிந்து வந்துள்ளார். திடீரென ஒருநாள் அவரது குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் பிரமுகர் ஒருவரிடம் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் குழந்தையின் புகைப்படத்தை அனுப்ப சொல்லி கேட்டுள்ளார். அதன்பின் தேவையான பணத்தையும் அளித்துள்ளார். அரசியல் கட்சி பிரமுகர்களிடம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என கூறினால் பணம் கிடைக்கும் என இதன்மூலம் தெரிந்துகொண்ட அவர், பாஜக மாநில தலைவரான அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி விஜய்வசந்த், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து கூகுள் பே செயலி மூலம் மொத்தம் 5 லட்சம் வரை இதுவரை பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், அவர் இதுபோன்று பெற்ற பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து சிவகுமாரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.