கலைஞர் நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் அருகே மஞ்சக்குடி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ஈரோடு தேர்தல் விடுத்து விவசாய பிரச்சனையை அரசு முக்கியத்துவம் கொடுத்து பார்க்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் வழங்க வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பயிர் காப்பீடு ஒரு ஏமாற்று வேலை அதனை முறைப்படுத்த வேண்டும். உளுந்து சாகுபடியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நெல்லின் ஈரப்பதம் 22% அளவிற்கு இருக்க வேண்டும் அந்த நெல்மணிகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் இதுகுறித்து மத்திய அரசிடம் மாநில அரசு பேச வேண்டும். திமுக அரசு விவசாய பட்ஜெட் போட்டு உள்ளது. அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். திமுக அரசு மது குறித்த கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழகத்தில் 2026இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். அதற்கான முன்னெடுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம். கலைஞர் இறந்த பொழுது உயர்நீதிமன்றத்தில் மெரினா கடற்கரையில் எந்தவித கட்டிடமும் ஏற்படுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் கலைஞரை அடக்கம் செய்திருக்க முடியாது. ஆகவே, எங்களால் தான் கலைஞர் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் நான் கலைஞர் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் வழக்கறிஞர் பாலுவை கூப்பிட்டு வழக்கை வாபஸ் பெற சொல்லி கலைஞரை அடக்கம் செய்ய உதவினோம். பேனா நினைவுச் சின்னம் கடலில் அமைப்பதால் கடல் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே, கலைஞர் நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா