கோவை மத்திய சிறையில் சோலார் பேனல் மூலம் இயங்கும் சைக்கிளை
தயாரித்த ஆயுள் தண்டனை கைதிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கவுந்தபாடியை
சேர்ந்தவர் யுகஆதித்தன். இவர் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார்.
யுக ஆதித்தன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சேலம் மாவட்டம் அழகாபுரம்
போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது
செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஆறு
ஆண்டுகளாக, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
யுகஆதித்தன் சிறையில் இருந்தபடியே தான் படித்த கல்வியை பயனுள்ளதாக்கும்
வகையில், இ-சைக்கிள் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த இ-சைக்கிள் 3 விதமாக
இயங்கும் வகையில் அவர் உருவாக்கி இருக்கிறார். இந்த சைக்கிள் சூரிய ஒளியில்
இருந்து மின்சாரம் பெறும், சோலார் பேனல் மூலம் இயக்கலாம், சைக்கிளை
மிதிக்கும் போது டைனமோவில் இருந்து வரும் மின்சாரத்தை கொண்டு இயக்கலாம்.
மேலும், 3-வது பேட்டரியில் சார்ஜ் ஏற்றிக் கொண்டும் ஓட்டலாம். தற்போது இந்த
இ-சைக்கிளை சிறை வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, யுகஆதித்தன் சிறை வளாகத்துக்குள் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என முயற்சி மேற்கொண்டார். அப்போது சிறை வளாகத்தில் பயன்படுத்தாமல் கிடந்த சைக்கிளை பார்த்த அவர், அதனை சூரிய ஒளி மற்றும் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைத்து உள்ளார்.
தொடர்ந்து இதனை ஒரு மாதத்தில் தயார் செய்து உள்ளார். சைக்கிளின் நடுவில்
தகடுகளை வைத்து அங்கு பேட்டரியை பொருத்தியுள்ளார். மேலும் பேட்டரியை சார்ஜ்
செய்வதற்காக டைனமோவையும் பொருத்தியுள்ளார். சைக்கிளை மிதிக்கும்போது
டைனமோ மூலமாக பேட்டரி சார்ஜ் ஏறும் வகையில் வடிவமைத்துள்ளார். மின்சாரம்
மூலமாகவும் பேட்டரியை சார்ஜ் செய்யலாம்.
கேரியரில் சோலார் பேனலை பொருத்தி அதன் மூலமாகவும் சைக்கிள் இயங்கும்
வகையிலும் வடிவமைத்து உள்ளார். ராணுவ வாகனத்துக்கு அடிக்கும் பச்சை
நிறத்தில் பெயிண்ட் அடித்து எங்களிடம் வழங்கினார். யுகஆதித்தனை நாங்கள்
வெகுவாக பாராட்டினோம். இந்த சைக்கிளை தற்போது சிறை வளாகத்தில், டவர்
பிளாக்கில் ரோந்து செல்லும் சிறை வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், இதுபோல 9 சைக்கிளை தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். தற்போது யுக
ஆதித்தன் இ-ஆட்டோ ரிக்ஷாவை தயாரித்து வருகிறார். ஓரிரு மாதங்களில் இந்த
பணி முடிவடையும். அதன் பின்னர் மின்சார ஆட்டோவை சிறை வளாகத்தில் ரோந்து
பணியில் பயன்படுத்த உள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
—கு. பாலமுருகன்







