திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை சென்ற 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை பிடிபட்டது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆதோனியை சேர்ந்த 6 பேர் வியாழக்கிழமை இரவு திருமலைக்கு பாதயாத்திரை சென்றனர். அலிபிரி மலைப்பாதை. ஏழாவது மைலில் ஆஞ்சநேய சுவாமி சன்னதி அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கடைக்கு சென்ற 3 வயது கௌசிக் என்ற சிறுவன் உணவுப்பொருள் வாஙகிக்கொண்டிருந்தான்.
திடீரென அங்கு வந்த சிறுத்தை ஒன்று, சிறுவனை கவ்வியபடி சென்றது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கூக்குரலிட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் பக்தர்களுடன் கற்கள் கம்புகளை வீசி எறிந்து சிறுத்தையை விரட்டியடித்து சிறுவனை மீட்டனர்.
பின்னர் சிறுவன் சிகிச்சைக்காக பத்மாவதி இருதாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதனையடுத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் வனத்துறை வைத்த் கூண்டில் சிறுத்தை சிக்கியது. மருத்துவ பரிசோதனைக்கு பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் சிறுத்தையை வனத்துறையினர் விட்டனர்.சேஷாசலம் மலைப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ள நிலையில், அதனை கண்காணிப்பு கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.






