குன்னூரில் தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள் உணவை தேடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி உலா வருவது சர்வ சாதாரணமாகியுள்ளது. குன்னூர் அருகே உள்ள சிங்காரா எஸ்டேட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனை சுற்றியும் வனப் பகுதியாகும்.
இந்நிலையில் இங்குள்ள பாறையில் அவ்வப்போது சிறுத்தை வந்து ஓய்வெடுத்து செல்வது அண்மை காலமாக வாடிக்கையாக உள்ளது. இதனால் சிங்காரா எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வளர்ப்பு நாய்களை சிறுத்தைகள் அடித்து கொண்டு செல்வதாகவும், இதனால் வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.







