வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்றார் மகாகவி பாரதி. அவரின் வார்த்தையை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற மகளிர் நலத்திட்டங்கள் இன்று நாட்டிற்கே முன்னோடி திட்டங்களாக உள்ளது.
1921-ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியின்போதுதான், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. 1929-ஆம் ஆண்டு நாட்டின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் முத்துலட்சுமி, முன்மொழிந்த தேவதாசி ஒழிப்பு தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, வரலாற்றில் இடம்பிடித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீதிக்கட்சிக்குப் பிறகு 1967-ல் ஆட்சி அமைத்த, பேரறிஞர் அண்ணா தலைமையிலான, திமுக அரசு, மகளிருக்குத் தொழிற்பயிற்சிகள் வழங்க, 12000-க்கும் மேற்பட்ட மகளிர் மன்றங்கள் ஏற்படுத்தியது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, அக்காலகட்டத்திலேயே வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக, மகளிர் தங்கும் விடுதிகளை ஏற்படுத்தினார்.
தற்போது நாட்டின் பாதுகாப்பு, காவல்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் பெண்கள் கோலோச்சுகின்றனர். ஆனால், இதற்குச் செயல் திட்டம் வகுத்தவர் தான் கருணாநிதி. 1973-ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான், நாட்டிலேயே முதன் முறையாக, தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்களை நியமித்தார்.
அனைத்து துறையிலும் பெண்களுக்குச் சமவாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்பதை மேடைதோறும் முழங்கியது மட்டுமல்லாமல், அதனை அரசுப் பணிகளில் நடைமுறைப்படுத்த ஊக்கக் கருவியாக இருந்தவர் கருணாநிதி. 1990-ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான ஆட்சியில்தான், அரசுப் பணியில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு செய்யும் நிலையில், இன்றுவரை நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. ஆனால், நாட்டிலேயே முதன்முறையாக 1996-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்களில், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடை அமல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். அதேபோல், பெண்கள் பொருளாதார சுதந்திரத்துடன் செயல்பட, 1990-ஆம் ஆண்டு மே 6-ஆம் தேதி, குடும்ப சொத்தில் பெண்களுக்குச் சமபங்கு வழங்கும், மகத்தான சட்டத்தை நிறைவேற்றினார் கருணாநிதி.
தன்னுடைய ஆட்சிக் காலம் முழுமைக்கும் மகளிர் நலன்களுக்கான பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார் கருணாநிதி. குறிப்பாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமணத்திடம், பெற்றோர் இல்லாத பெண்களுக்கான அன்னை தெரசா நினைவு திருமண உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டுவந்தவர் கருணாநிதி.
அண்மைச் செய்தி: ‘சீறிப் பாய்ந்த SSLV-D1; சிக்னல் கிடைப்பதில் சிக்கல்?’
அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் இலக்கியவாதியான கருணாநிதி விதவை என்ற சொல்லில் கூட பொட்டு இல்லை எனக் கருதி, அந்த சொல்லுக்கு மாற்றாக இரு திலகங்கள் வரும் வகையில் கணவரை இழந்த பெண்களைக் கைம்பெண் என்று அழைக்கத் தொடங்கினார். அதேபோல், தகாத பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த மாற்றுப் பாலினத்தவர்களை, திருநங்கைகள் என அழைக்கும் வழக்கத்தை உருவாக்கினார். அவர்களின் முன்னேற்றத்திற்காக நாட்டிற்கே முன்மாதிரியாகத் திருநங்கை நலவாரியம் தொடங்கப்பட்டதும் கருணாநிதியின் ஆட்சியில் தான்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழியில் நடைபோடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும், மகளிருக்குப் பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்களைச் செயல்படுத்தி மகளிர் நலன் காக்கும் அரசாக வலம்வருவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.