இந்தியாவின் முன்னணி காட்சிக்கலை படப்பிடிப்பு கூடங்களில் ஒன்றான பாண்டம் எப் எக்ஸ் பங்கு விற்பனையில் அடியெடுத்து வைத்திருந்த நிலையில் அது தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு அடுத்தகட்டத்தில் நகர்ந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் (PhantomFX) நிறுவனம், உலகம் முழுவதும் பல திரைப்படங்களுக்கும், இணையத் தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் பிரமிக்க வைக்கும் தத்ரூபமான காட்சி விருந்துகளை உருவாக்கித் தந்திருக்கிறது. விஜய் நடித்த பீஸ்ட், கமல்ஹாசனின் விக்ரம், ராஜமௌலியின் வீர காவிய அதிரடித் திரைப்படமான RRR, சூர்யாவின் ஜெய்பீம் போன்ற இந்தியாவின் வெற்றிப்படங்கள் பலவற்றிற்கு VFX காட்சிக்கலையை இந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. பிரம்மாஸ்த்ரா, ஆதிபுருஷ் ஆகியனவற்றோடு ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இணையத் தொடர்களுக்கும் பிரமிக்க வைக்கும் VFX காட்சிக்கலை அமைப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது.
இந்த நிறுவனம் தற்போது தேசிய பங்கு சந்தை பட்டியலிடப்பட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில், என்எஸ்இ உறுப்பினர்கள் பாண்டம் எப் எக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிடம் அதற்கான சான்றிதழ்களை வழங்கினர். இதன் மூலம் SME ஐபிஓவில் நுழைந்த முதல் தென்னிந்திய நிறுவனம் PhantomFX ஆகும் என்ற பெருமையை சேர்த்துள்ளது. இந்நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எல்ஐசி சமீபத்தில் ரூ.15,000 கோடி திரட்ட இந்திய மூலதனச் சந்தைகளின் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய பொது வெளியீட்டை வெளியிட்டபோது, சந்தாவுக்கு 7 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்றிருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், PhantomFX ரூ. 29 கோடிக்கு 1.7 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. “இது நிறுவனத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுவதாக அந்நிறுவன குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக PhantomFx இன் நிறுவனர், நிர்வாக இயக்குநர் மற்றும் CEO பெஜாய் அற்புதராஜ் கூறும் போது, “இந்த நாள் நிறுவனம் அதிக உயரங்களை அடையும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என்றார். ஐபிஓவுக்கு கிடைத்த வரவேற்பு அபாரமானது. இது பொதுமக்கள் மற்றும் எங்கள் நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதற்கான எங்கள் பொறுப்பை அதிகரித்துள்ளது என தெரிவித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகளாவிய தொழில்துறையில் முன்னணியில் இருக்க, உயர்நிலை டிஜிட்டல் ஸ்டுடியோக்களை அமைப்பதன் மூலம் வெளிநாடுகளில் தனது சிறகுகளை விரிக்க திட்டமிட்டுள்ளது என்றும் கூறினார்.








