மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடப்பட்டுள்ளது.
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு பிரம்மாண்ட அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் வரும் ஆண்டில் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தற்போது ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக அலங்காநல்லூா் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கா் நிலம் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடமாக அதிகாரிகளால் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் அரங்கம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள், வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் படி, அரங்கம் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து சமர்பிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடித்து நான்கு மாதத்தில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் வரும் ஆண்டிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
– இரா.நம்பிராஜன்








