நெல்லை பத்தமடையில் முதியவர் ஒருவர் தூக்கமின்றி, உணவின்றி இரவும், பகலுமாக மரத்தின் மீது 39 மணி நேரம் அமர்ந்து உதவிக்காக காத்துக்கிடந்த முதியவரை எஸ்டிபிஐ கட்சியின் செயல் வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி மீட்டுள்ளனர்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழைநீர் தேக்கம் மற்றும் அதிகனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பத்தமடை அருகே கொழுமடை கிராமத்தில் 72 வயது நிரம்பிய செல்லையா, தனது தோட்டத்தை வாழ்விடமாக்கி ஆடுகளை வளர்த்து விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார். கடந்த 17-ம் தேதி அன்று இரவு திடீரென கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வந்த வெள்ளப்பெருக்கு, அவர் வாழும் தோட்டத்தினை சூழ்ந்தது. அவர் வளர்த்த ஆடுகள் தன் கண் முன்னே வெள்ளத்தில் இழுத்து சென்றதை பார்த்த அதிர்ச்சியில், மரத்தின் மீது ஏறி அமர்ந்து தூக்கமின்றி, உணவின்றி இரவும், பகலுமாக 39 மணிநேரம் இருந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவரது மகன் கொடுத்த தகவலின்படி பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி பெற்ற எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் தலைமையில் 15 செயல்வீரர்களோடு 1 மணி நேர முயற்சிக்கு பின் 1 கிலோ மீட்டர் நீரில் நீந்திச்சென்று முதியவரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். துணிச்சலுடன் செயலாற்றிய எஸ்டிபிஐ வீரர்களை பார்த்த கிராம மக்கள் அனைவரும் பாராட்டினர். இவர்கள் மேலும் பல மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







