ஆருத்ரா நிறுவனத்தின் சந்திரகாந்த் என்ற நிர்வாகியிடம் இருந்து 90 மூட்டை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி உள்ளிட்ட 11 பேர் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசாரால் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மோசடி செய்யப்பட்ட பணத்தில் இதுவரை ரொக்கமாக 5 கோடியே 69 லட்சம் ரூபாயும், 1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களின் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்களும் கண்டறியப்பட்டன.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல நடிகரும், தயாரிப்பாளரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. அதேபோல அண்மையில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி ஹரீஷையும் 4 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையிலும், ஆருத்ரா மோசடியில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் தொடர்பு குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பாஜகவில் ஓ.பி.சி பிரிவு மாநில துணைத் தலைவராக இருந்து வரும் ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா மோசடி வழக்கில் இருந்து தனக்கு வேண்டப்பட்டவர்களை காப்பாற்ற உதவி வந்ததாக தகவல் வெளியானது. அதேபோல ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் மற்றும் கைது செய்யப்பட்ட ரூசோ ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே.சுரேஷ் வங்கிக் கணக்கிற்கு கோடிக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது.
அதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதமாக நோட்டீஸ் வழங்கியும் எந்தவித பதிலும் அளிக்காத ஆர்.கே.சுரேஷ், தனது வழக்கறிஞர்களை நேரில் அனுப்பி விளக்கங்களை தருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் மட்டுமல்லாமல், பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் மத்திய விசாரணை அமைப்புகளும் தங்களது விசாரணையை துவங்கியுள்ளன. இந்த வழக்கில் கிட்டத்தட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக இன்னும் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சந்திராகந்ததிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், சந்திரகாந்தின் 3 கோடி ரூபாய் வங்கி கணக்கை முடக்கியதாகவும் அவரிடம் ஆருத்ரா நிறுவனத்தின் பணபரிவர்த்தனை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஆருத்ரா நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகி ராஜா செந்தாமதரை என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜா செந்தாமரை, காஞ்சிபுரம் பகுதியில் ஜிகேஎம் சுபமங்களா மேரேஜ் ஈவன்ட் மற்றும் ஜி கே எம் டிரேடிங் நிதி நிறுவனம் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். காஞ்சிபுரம் பகுதியில் ஆருத்ரா நிறுவனத்திற்கு முக்கிய முகவராக செயல்பட்டு வந்தார். அதிலும் குறிப்பாக ராஜா செந்தாமரை நிதி நிறுவனம் என்ற பெயரில் பணத்தை மக்களிடம் பெற்று அதை ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
இதனை அடுத்து ஆருத்ரா முகவராக இருந்து வந்த அவர் காஞ்சிபுரம் பகுதியில் ஆருத்ரா டிரேடிங் நிறுவனத்தில் இயக்குனராகவும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர், காஞ்சிபுரத்தில் 200க்கும் மேற்பட்டோர்களிடம், சுமார் 600 கோடி முதலீடாக பெற்றுள்ளார் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ராஜா செந்தாமரை என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா