நெல்லை அருகே தூண்டில் வளைவு அமைக்க கோரி 9 கடற்கரை கிராம மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டத்திலுள்ள கடற்கரை கிராமமான கூடுதாழையில் கடல் அரிப்பால் அப்பகுதியில் உள்ள வீடுகள் சேதம் அடைந்து வருவதால் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து அக்கோரிக்கை நிறைவேற்ற கோரி மீனவர்கள் கடந்த 11ஆம் தேதி முதல் கூடுதாழையில் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களான உவரி, இடிந்தகரை, கூட்டப்பனை, கூத்தங்குழி, பெருமணல் உள்ளிட்ட ஒன்பது கிராம மீனவ மக்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
—கா.ரூபி







