தனுஷ்கோடியில் உணவின்றி தவித்த 8 இலங்கை தமிழர்கள்; மீட்ட கடலோர காவல்படையினர்

தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 8 இலங்கை தமிழர்களை கடலோர காவல் படையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின்…

தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 8 இலங்கை தமிழர்களை கடலோர காவல் படையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் அவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடி அடுத்துள்ள ஒன்றாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் தகவல் அளித்தனர். அடிப்படையில் கடலோர காவல்துறையினர் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை பத்திரமாக மீட்டு மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில், இலங்கை யாழ்பாணம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி மற்றும் அவரது மூன்று குழந்தைகள், தலைமன்னாரை நேர்ந்த சசிகுமார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மன்னாரை சேர்ந்த 65 வயது மூதாட்டி இந்துமதி என மொத்தமாக 8 பேர் நேற்று இரவு ஒரு பைபர் படகில் புறப்பட்டு இன்று தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில் வந்திறங்கியது தெரியவந்தது.

இது குறித்து அவர்கள் கூறியது, “இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்துள்ளது. விலைவாசி ஒரு பக்கம் உயர்வு, மறுபக்கம் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது அதுமட்டுமல்லாமல்அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடுகள் உள்ளதால் பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கை பணம் 4 லட்சம் ரூபாய் கொடுத்து பைபர் படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து தமிழக முகாம்களில் தங்கியுள்ள தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழலாம் என தனுஷ்கோடி வந்தோம்” என்று தெரிவித்தனர்.

மேலும், தங்களை அழைத்து வந்த படகு தனுஷ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், அதிகாலை முதல் உணவின்றி கடும் சூறைக்காற்றுக்கு மத்தியில் உயிரை பாதுகாத்து கொண்டு தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை காட்டி அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில் மரைன் எங்களை போலீசார் பத்திரமாக உரிய நேரத்தில் மீட்டனர் என்று கூறிய அவர்கள், கால தாமதமாகி இருந்தால் நிச்சயம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் விவரித்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ந்தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 157 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.