பொள்ளாச்சியில் மர வியாபாரி வீட்டில் 70 சவரண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி ஜோதி நகர் D காலனியில் வசித்து வருபவர் மர வியாபாரி தங்கவேல். இவர் மற்றும் இவரது மனைவி பிரேமலதா இருவரும் கடந்த 16ம் தேதி வீட்டை பூட்டி விட்டு கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 18) மாலை தங்கவேலின் உறவினர் ஒருவர் அவ்வழியாக சென்ற போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சந்தேகமடைந்தார்.
இதனையடுத்து அவர் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் வீட்டை சோதனையிட்ட போது முன்பக்க கதவுகள், மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டு உரிமையாளர் தங்கவேலுக்கு தகவல் கொடுத்தனர்.
இன்று அதிகாலை குருவாயூரிலிருந்து வந்த தங்கவேல் பீரோவில் இருந்த 70 சவரன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது. பின்னர் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை ஆய்வு செய்து நகை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.








