கர்நாடகாவில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. மாநிலத்தில் பெங்களூரு, சிவமொக்கா, சிக்கமகளூரு உள்ளிட்ட பகுதிகளிலும், வடகர்நாடகத்திலும் கனமழை பெய்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வடகர்நாடகத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பெலகாவி மாவட்டம் ஹிரேபாகேவாடி அருகே படலஅங்கலகி கிராமத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையால் அதே கிராமத்தில் வசித்து வரும் பீமப்பா கனகவி என்பவருக்கு சொந்தமான பழமையான வீடு இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் இருந்த பீமப்பா கனகவி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் உடனடியாக ஹிரேபாகேவாடி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வீட்டின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது ஒரு சிறுமி உள்பட 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது தெரிந்தது. மேலும் 3 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் கங்கவ்வா, சத்யவ்வா, 8 வயது சிறுமி பூஜா, சவிதா, லட்சுமி, அர்ஜூன், காசவ்வா என்பதும், இவர்கள் 7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
இந்த நிலையில், வீடு இடிந்து விழுந்து பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத்தை கர்நாடக அரசு அறிவித்துள்ளது