மத்திய அரசு எதிர்த்தாலும் 7.5% இடஒதுக்கீட்டில் சிறப்பான தீர்ப்பு: வில்சன் எம்.பி

மத்திய அரசு கடுமையாக எதிர்த்த போதிலும் 7.5% இடஒதுக்கீடு வழக்கில் மகத்தான தீர்ப்பு கிடைத்துள்ளது என மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் சேர்வதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்…

மத்திய அரசு கடுமையாக எதிர்த்த போதிலும் 7.5% இடஒதுக்கீடு வழக்கில் மகத்தான தீர்ப்பு கிடைத்துள்ளது என மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனை சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் உயர்கல்வித் துறை சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் வில்சன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 7.5% இடஒதுக்கீடு வழங்க காரணமாக இருந்தவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இன்று நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இவ்வழக்கின் எதிர்மனுதாரர்களுடன் சேர்ந்து மத்திய அரசும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது என்று குறிப்பிட்டார்.

தமிழக அரசு தரப்பில் இது ஒரு சமூகத்திற்கான இடஒதுக்கீடு இல்லை எனவும் ஏழை, எளிய மாணவர்களுக்கான இடஒதுக்கீடு என்பதை அழுத்தமாக பதிவு செய்தோம் என்றும் குறிப்பிட்ட வில்சன், 7.5% இடஒதுக்கீடு என்பது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த சட்டம் என்றாலும் அதன் மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார்; அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தி கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், அதற்கு பிறகு திமுக ஆட்சியில் 7.5% இடஒதுக்கீடு வழக்கு முதலமைச்சர் நேரடி பார்வையில் இருந்தது, அதற்கு கிடைத்த மகத்தான வெற்றி இதுவாகும் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.