நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 5 ஆயிரத்து 676 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று தொற்று பாதிப்பு 5 ஆயிரத்து 880 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
இந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 93 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 676 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தானில் 3 பேர், கர்நாடகாவில் 2 பேர் , குஜராத், அரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் தலா ஒருவர் என 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் கேரளாவில் விடுபட்ட 6 உயிரிழப்புகளும் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 761 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 79 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 68 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 796 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
https://twitter.com/MoHFW_INDIA/status/1645656792872153089?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








