தமிழகத்தில் இதுவரை 55 லட்சத்து 51 ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கொரோனா ஒழிப்பில் தடுப்பூசிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தற்போது போடப்பட்டு வருகின்றன.
கொரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் போடப்பட்டு வருகின்றன. முதலில், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டன. அதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு போடப்பட்டன. இதன் பின்னர், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
ஜனவரி 16ம் தேதியில் இருந்து பிப்ரவரி 27ம் தேதி வரை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில், கோவிஷீல்டு தடுப்பூசிகள் 4 லட்சத்து 47 ஆயிரத்து 527 பேருக்கும், கோவாக்சின் தடுப்பூசிகள் 10 ஆயிரத்து 424 பேருக்கும் என மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 951 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
இதையடுத்து, மார்ச் 1ம் தேதி முதல், மார்ச் 31ம் தேதி வரை, கோவிஷீல்டு தடுப்பூசிகள் 21 லட்சத்து 88 ஆயிரத்து 099 பேருக்கும், கோவாக்சின் தடுப்பூசிகள் 3 லட்சத்து 85 ஆயிரத்து 581 பேருக்கும் என மொத்தம் 25 லட்சத்து 73 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 30 லட்சத்து 31 ஆயிரத்து 631 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி கோவிஷீல்டு தடுப்பூசிகள் மொத்தம் 47 லட்சத்து 55 ஆயிரத்து 673 பேருக்கு போடப்பட்டுள்ளன. கோவாக்சின் தடுப்பூசிகள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 982 பேருக்கு போடப்பட்டுள்ளன. இதன் மூலம், மொத்தம் இதுவரை 55 லட்சத்து 51 ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன







