சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி). இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையானது 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூலை 1-ம் தேதியுடன் ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
சரக்கு-சேவை வரி என்றால் என்ன?
சரக்கு மற்றும் சேவைகளுக்கான வரியானது நுகர்வோர் மீது விதிக்கப்படும் ஒரு இலக்கின் அடிப்படையிலான வரியாகும். முன்பு இருந்த நிலைக்கு முரணாக செலுத்தப்பட்ட வரியின் மதிப்புடன், உற்பத்தியாவதிலிருந்து இறுதி நுகர்வு வரை அனைத்து நிலைகளிலும் வரி விதிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரே மதிப்புக்கூட்டு வரியே விதிக்கப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவைப் போன்ற பெரிய மற்றும் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டிற்கு ஒரு ஒருங்கிணைந்த மறைமுக வரி முறையை வெற்றிகரமாக ஆக்குவது ஒன்றும் சாதாரண பணி அல்ல. கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கொண்டுவரப்பட்டதன் நோக்கம் என்ன? 5 ஆண்டுகளில் அதன் நோக்கம் நிறைவேறியதா? ஜிஎஸ்டி சந்தித்த சவால்கள் மற்றும் சாதைனைகளையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமலுக்கு கொண்டுவரப்பட்டாலும், அதற்கான பணிகள் என்பது 12 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிதி அமைச்சகத்துக்கான ஆலோசகராக இருந்த விஜய் எல். கெல்கர் தலைமையில் பணிக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு தான் 2005 ஆம் ஆண்டில் மத்திய VAT மற்றும் மாநில அளவிலான VATகளுக்குப் பதிலாக அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதும் விரிவான வரியை பரிந்துரைத்தது. ஒவ்வொரு தயாரிப்பு அல்லது சேவைக்கும் ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்பதை கொண்டுவந்து சிக்கலான மறைமுக வரி முறையை அகற்ற முயன்ற ஒரு முக்கிய சீர்திருத்த பரிந்துரையாகும்.
முந்தைய மறைமுக வரி விதிப்பு முறையில், உற்பத்தி அல்லது உற்பத்தி நிலை வரையிலான பொருட்களுக்கு மத்திய அரசு வரி விதிக்கலாம். அதே நேரத்தில் மாநிலங்கள் பொருட்களின் விற்பனை அல்லது விநியோகத்தின் மீது வரிகளை வசூலித்தன.
சேவைகளுக்கான உரிமை மத்திய அரசுக்கு மட்டு வழங்கப்பட்டது. ஜிஎஸ்டியின் கீழ், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டும் சரக்குகள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டின் முழு விநியோகச் சங்கிலிக்கும் உற்பத்தி முதல் விநியோகம் வரை வரி விதிக்கலாம் என்றானது.
சவால்கள்
0, 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரி அடுக்குகளுக்குள் பெரும்பாலான பொருட்கள் வருவதால், இந்த அமைப்பு நுகர்வோர் மற்றும் விநியோகிப்பாளர்களுக்கு எளிமையானதாக இருக்க வேண்டும். அனைத்து வருமானங்கள் மற்றும் விலைப்பட்டியல்கள் ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பில் பதிவேற்றம் செய்யப்படுவதால், வரி ஏய்ப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
உள்ளீட்டு வரிக் கடன் மற்றும் தலைகீழ் கட்டண முறை போன்ற ஜிஎஸ்டியின் உள்ளமைக்கப்பட்ட அம்சங்களால் சில நிறுவனங்கள் அமைப்புசாரா நிறுவனங்களில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட துறைக்கு மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அதிக வரி வசூல் மற்றும் பொருளாதாரம் முறைப்படுத்தப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் இவற்றில் அரசு பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது.
5 ஆண்டுகளில் சாதிக்க முடிந்தது என்ன?
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் இன்னமும் சில பிரச்னைகள் இருக்கத் தான் செய்கிறது. இருப்பினும், ஒருங்கிணைந்த மறைமுக வரி விதிப்பு முறை என்பது நாடு முழுவதும் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்தியா போன்ற மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டில் ஜிஎஸ்டி அமல் அரிய ஒரு சாதனையாகத் தான் பார்க்க வேண்டும்.
இந்த 5 ஆண்டுகளில் பழைய வரி விதிப்பு முறையிலிருந்து ஜிஎஸ்டி முறைக்கு மிகச் சிறப்பாக அனைவரையும் மாற்ற முடிந்திருக்கிறது. ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி, 1.36 கோடி வரி செலுத்துவோர் ஜிஎஸ்டிஎன்-இல் பதிவு செய்திருக்கின்றனர்.
அவர்களில் 1.17 கோடி பேர் சாதாரண வரிசெலுத்துபவர்கள் ஆவார். 16 லட்சம் பேர் கூட்டமைவு (composition) முறையில் வரி செலுத்துபவர்களாக உள்ளனர். இவர்கள் குறைந்த விகிதத்தில் வரி செலுத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு வரி செலுத்துவோர் தளம் விரிவடைந்துள்ளது. பல நிறுவனங்கள் தங்களின் விநியோகிப்பாளர்களின் உள்ளீட்டு வரி வரவைத் தடையின்றிப் பெற தங்களைப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டன.
2020ம் நிதியாண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வரி வசூல் பாதிக்கப்பட்டது. எனினும், அதன் பின்னர் 27 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை எட்டியுள்ளது. முழு அமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவதால் வரி ஏய்ப்பைக் கண்டறிந்து சரிசெய்வது எளிதாகியுள்ளது.
சில மாநிலங்கள் ஜிஎஸ்டியை எதிர்ப்பது ஏன்?
ஜிஎஸ்டி என்பது இலக்கு அடிப்படையிலான வரியாகும். இதில் உற்பத்தியாளரை அடிப்படையாகக் கொண்ட மாநிலத்தை விட பொருட்கள் மற்றும் சேவைகள் விற்கப்படும் மாநிலத்தால் தான் அதிக வரி வசூலிக்கப்படுகிறது. பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் கனிமங்கள், பொருட்கள் அல்லது வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் சில மாநிலங்கள் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை இழந்துள்ளன.
2015-16 ஆம் ஆண்டின் அடிப்படை ஆண்டில் ஜிஎஸ்டி வருவாயில் 14 சதவீத வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி, முதல் 5 ஆண்டுகளில், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு மாறுவதற்கு உதவியாக இருந்தது.
ஆனால், கடந்த 2020இல் கொரோனா வைரஸ், பொருளாதார மந்தநிலை ஆகிய காரணங்களால் மாநிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன.
பல மாநிலங்கள் இழப்பீடு வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் அல்லது மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வருவாய் பகிர்வை 50 சதவீதத்தில் இருந்து உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கு இடையே உரசலை ஏற்படுத்தியிருக்கிறது. ஜிஎஸ்டி கூட்டாட்சியின் தன்மையை உள்ளடக்கியிருப்பினும், கடந்த ஐந்தாண்டுகளில் அது செயல்பட்ட விதம் எதிர்கால பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதில் அதிக சிரமம் இருக்காது என்பதையே காட்டுகிறது.
ஜிஎஸ்டியை மேலும் பயனுள்ளதாக்க என்ன செய்ய வேண்டும்?
மின்னணு வழி இன்வாய்ஸ்களை தாக்கல் செய்வதற்கான தேவை மற்றும் மின்னணு வழி பில்களை செயல்படுத்துவது ஆகியவை ஜிஎஸ்டி அமைப்பில் சுயமாக செயல்படும் முறையை வலுப்படுத்தியுள்ளது.
இது இப்போது அதன் அசல் வடிவமைப்பை நோக்கி நகர வேண்டும். இதில் விநியோகிப்பாளர்கள் மற்றும் வாங்குபவரின் வருமானம் மற்றும் விலைப்பட்டியல்கள் பொருந்துகின்றன.
உள்ளீட்டு வரி வரவை (Input tax credit) கணக்கிட்ட பிறகு இறுதி வரி செலுத்துதல் தானாகவே கணினியால் கணக்கிடப்படும். இது வரி ஏய்ப்பைத் தடுக்கவும், வரி செலுத்துவோர் தளத்தை மேலும் விரிவுபடுத்தவும் உதவும்.
மொத்தத்தில் ஜிஎஸ்டி முறை சில சவால்களை எதிர்கொண்டபோதிலும் வரவேற்கத்தக்க மாற்றங்களும் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
-மணிகண்டன்