கரூரைச் சேர்ந்த 3 வயது சிறுமி 5 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
கரூரைச் சேர்ந்த கருப்பையா – லதா தம்பதியின் மகள் மாதங்கி ஸ்ரீ. 3 வயதான இவர் ஸ்கேட்டிங்கில் சிறந்து விளங்கியதால் உலக சாதனை நிகழ்த்த அவரது பெற்றோர் விரும்பினர். இதையடுத்து, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு 1 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்த முதல் இளம்வயது சிறுமி என்ற உலக சாதனையை படைத்தார்.
இந்நிலையில், மாதங்கிஸ்ரீ தொடர்ந்து 5 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார். இடைவிடாமல் தொடர்ந்து 5 மணி நேரத்தில் 365 சுற்றுகள், 26.5 கி.மீ தூரத்தைக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் இந்தியா சிஇஓ அரவிந்த், தேசிய தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தேசிய நடுவர்கள் லாவன்யா, ரஞ்சித் ஆகியோர் சிறுமியின் இந்த உலக சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
3 வயது மட்டுமே ஆன மாதங்கி தொடர்ந்து 5 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








