சூலூர் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 452 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தவர் உட்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம், பள்ளபாளையம் பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு, கடைகளுக்குக் குட்கா சப்ளை செய்யப்படுவதாகச் சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பள்ளபாளையம் ஆவின் டீக்கடை பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளுக்குச் சப்ளை செய்வதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 452 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து கார்களில் குட்கா கடத்தி வந்து, உள்ளூர் கடைகளுக்குச் சப்ளை செய்து வந்த ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவரையும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகன்லால் என்பவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.