சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை, கள்ளச்சந்தையில் விற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசால் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த மருந்தை, சிலர் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது. மாறுவேடத்தில் போலீசார் நடத்திய ஆய்வில், வில்லிவாக்கத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை ஊழியர் ஒருவர், கள்ளத்தனமாக ரெம்டெசிவிர் மருந்து விற்றது தெரியவந்தது.
இரண்டாயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான மருந்தை, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதை அடுத்து, அவரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோன்று புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்கள் இருவர், ஐந்தாயிரம் ரூபாய்க்கு மருந்தை விற்றது தெரியவந்துள்ளது. இதுபோல், வில்லிவாக்கம் ஐசிஎஃப் அருகே, சட்டவிரோதமாக மருந்து விற்பனையில் ஈடுபட்ட கார்த்திகேயன் என்பவரையும், போலீசார் கைது செய்தனர்.







