பழனி அருகே மக்காச்சோளத் தட்டைக்குள், எரிந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அருகே வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு. இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் சிவரஞ்சனி என்ற மகளும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோளத்தட்டை இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது மக்காச் சோளத் தட்டைக்குள் இறந்த நிலையில் 4 பேரின் உடல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தது தோட்டத்தின் உரிமையாளர் சின்ராசு, அவரது மனைவி வளர்மதி, மற்றும் மகன் கார்த்திகேயன், மகள் சிவரஞ்சனி என தெரிய வந்தது. உடனடியாக அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில் நேற்று வேலாயுதம்பாளையம் புதூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் வீட்டிற்கு அவர்கள் வந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இது கொலையா அல்லது உயிரிழப்பு என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







