மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேறியதையடுத்து, நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் இரண்டு கோரிக்கைகளை வைத்துள்ளார்.
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். மசோதாவை கொண்டு வர கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவலாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
இந்த விவாதத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்பதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஓட்டெடுப்பு நடைபெற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர். இதனைதொடர்ந்து, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் கூறியதாவது, “நமது குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய நாள், நமது ஜனநாயகத்தின் இருக்கை அதன் புதிய வீட்டிற்கு மாறியது. இந்தப் புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா, நமது தேசத்தின் மிகப்பெரும் சிறுபான்மையினரான இந்தியப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட நீண்டகால அநீதியைச் சரி செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன். பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் நாடுகள் எப்போதும் செழிக்கும். இந்த மசோதா மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது, பின்வரும் கவலைகளை நிவர்த்தி செய்யுமாறு அனைத்து தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்:
https://twitter.com/ikamalhaasan/status/1704329910825951446
இந்த மசோதா அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணய நடவடிக்கைக்கு பிறகு தான் நடைமுறைக்கு வருகிறது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்ட சபைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த மசோதா மாநிலங்களவையிலும் நீடிக்கப்பட வேண்டும்.
இந்த மசோதா அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்குப் பிறகுதான் நடைமுறைக்கு வருகிறது. இவை இரண்டால் தான் கடந்த காலங்களில் தாமதமாகின. இந்த விஷயங்கள் தற்போது தடையாக இருக்கக் கூடாது. சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் நாளை நான் எதிர்நோக்குகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.







