நூலகங்களுக்கு நூல்கள் வாங்க நிபுணர் குழு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

நூலகங்களுக்கு நூல்கள் வாங்க நிபுணர் குழு ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் , கலைஞர் 100  என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.…

நூலகங்களுக்கு நூல்கள் வாங்க நிபுணர் குழு ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் , கலைஞர் 100  என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில்,கலைஞர் புகைப்பட கண்காட்சியை முதலைச்சர் பார்வையிட்டார் மேலும் கலைஞர் 100 என்ற நூலினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது : கலைஞர் 100 என்ற புத்தகத்தை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்க மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் நூல்களை 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கி உள்ளோம். நூலகங்களுக்கு நூல்கள் வாங்க நிபுணர்கள் அடங்கிய தேர்வுக்குழு ஏற்படுத்தப்படும்.

விகடன் குழுமம் முதலில் இந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தார்கள் அதை பார்த்த பிறகு நான் மிகவும் மெய் சிலிர்ந்து போனேன். இந்த புத்தகத்தை கருணாநிதி பார்த்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். அவர் இல்லை என்று சொன்னாலும் அவருடைய அன்பு மகனாக நான் அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்
பன்முக ஆற்றல் கொண்டவர் தான் கருணாநிதி. கலைஞர் 100 நூல் வெளியிடுகிற ஆனந்த விகடன் இன்னும் சில ஆண்டுகளில் விகடன் 100 என்ற விழாவை காண இருக்கிறது. அந்த விழாவிற்கும் என்னை அழைப்பார்கள் என்பது எனக்கு தெரியும்

திமுக-வின் முதல் மாநாடு பற்றி எட்டு பக்கம் எழுதியவர்கள் ஆனந்த விகடன் தான். ஸ்டாலின் மூத்த பத்திரிக்கையாளர் பார்வை என்ற புத்தகத்தை வெளியிட்டது அன்றே ஆனந்த விகடன். இன்று கலைஞர் 100 என்ற புத்தகத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது
இதை படிக்கும் போது கருணாநிதியின் வாழ்க்கையில் அவருடன் பயணிப்பது போல் தோன்றுகிறது. இந்த புத்தம் அவருடைய டைரி என்று சொல்லலாம். கலைஞர் 108 பதிவுகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது

பத்திரிகை அதிபர்கள் பெரும் அளவில் இந்த இடத்தில் கூடிய உள்ளீர்கள், ஒரு ஆட்சி செயல்படுத்தக்கூடிய நல்ல திட்டங்களை மனப்பூர்வமாக ஏற்று எழுத வேண்டும். அப்படி எழுதினால் தான் நீங்கள் விமர்சிக்கும் பொழுது மதிப்பும் மரியாதையும் இருக்கும்
எதையுமே ஆதரித்து எழுதாமல் விமர்சித்து மட்டும் எழுதினால் அந்த விமர்சனங்களுக்கு மதிப்பு இருக்காது. சரியாக ஆதரிப்பதும், விமர்சனத்தை சுட்டிக்காட்டுவதும் தான் நடுநிலை பத்திரிகையாளருக்கு தர்மம்

அதுபோன்று தான் தமிழ்நாடு ஊடகங்கள் செயல்பட வேண்டும் என மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் . இது எனக்காக அல்ல நாட்டு மக்களுக்காக, சமுதாயத்துக்காக,
ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சமூக நீதி, நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இது அரசியல் ரீதியாக எதிர்கொண்டு தடுப்போம். ஆனால் அது மட்டும் போதாது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் நீங்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.