கப்பலூர் சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வசிப்பவர்களுக்கு, வணிகம் சாராத வாகனங்கள் பயன்படுத்துவதற்கு ஆண்டுக்கு ரூ.315 வசூலிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றவும் மேலக்கோட்டைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நேரில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கப்பலூர் சுங்கச்சாவடி பயன்படுத்துவரிடம் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 ஆம் ஆண்டின்படி தான் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது டோல் பிளாசா TOT சலுகையாரால் இயக்கப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2023 : 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்
அதாவது உள்ளூர் வாகனங்களுக்கு டோல் பிளாசாவில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிப்பவர்களுக்கு, வணிகம் சாராத வாகனங்கள் பயன்படுத்துவதற்கு ஆண்டுக்கு ரூ.315 வசூலிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு (தேசிய அனுமதியின் கீழ் இயங்கும் வாகனங்கள் தவிர) கட்டணம் 50% தான். அதாவது சேவை சாலை அல்லது மாற்றுப்பாதை இல்லாதவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலிருந்து 50 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.
அடிக்கடி பயன்படுத்துவோருக்கு, ஒரு மாதத்திற்கு 50 பயணங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டணமும், மாதாந்திர அனுமதி சீட்டு வைத்திருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்புபவர்களுக்கு ஒன்றரை மடங்கு ஒற்றைக் கட்டணம் செலுத்தும் வசதியும் நீடிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வருகிறோம். இது சிக்கல்களை தீர்க்க உதவும்”. இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.







