2வது டி20 போட்டி; இலங்கையுடன் இந்தியா போராடி தோல்வி

இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான 2வது டி20 போட்டியில் இந்தியா போராடி தோல்வியை தழுவியது. இந்த தொடரில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3…

இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான 2வது டி20 போட்டியில் இந்தியா போராடி தோல்வியை தழுவியது. இந்த தொடரில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டி புனே மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி அணி இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கம் அமைத்தனர். சிறப்பாக விளையாடிய குஷால் மெண்டிஸ் அரைசதம் அடித்தார். தொடக்க விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த நிலையில் குசால் மெண்டிஸ் 52 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் பதும் நிசாங்கா 33 ரன்கள் , பாணுகா ராஜபக்ச 2 ரன்கள், சரித் அசலங்கா 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் தசுன் ஷனகா பந்துகளை சிக்ஸர் , பவுண்டரிக்கு பறக்க விட்டார். சிறப்பாக விளையாடிய அவர் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை இலங்கை அணி குவித்தது. இந்தியா சார்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட் , அக்சர் படேல் 2 விக்கெட் வீழ்த்தினர் .

207 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் , அக்சர் படேல் இருவரும் இணைந்து சரிவில் இருந்து மீட்டனர். பந்துகளை சிக்ஸர்கள் , பவுண்டரிக்கு விரட்டி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 51 ரன்களில் வெளியேறினார். அக்சர் படேல் அதிரடியை தொடர்ந்தார். பின்னர் ஷிவம் மாவியும் அதிரடியாக விளையாடினார். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தசுன் ஷானகா வீசிய இந்த ஓவரில் இந்திய அணி 4 ரன்கள் மட்டுமே அடித்தது. அக்சர் படேல் 31 பந்துகளில் 65 ரன்களில் வெளியேறினார். ஷிவம் மாவி 16 பந்துகளில் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. மூன்று போட்டி கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. கடைசி போட்டி 7ம் தேதி நடக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.